பரியேறும் பெருமாள்: தமிழின் முதல் ‘சேரி மையத் திரைப்படம்’

Views : 758

பதிவு செய்த நாள் 08-Jan-2020

எனது வாழ்க்கையில் ஒரு திரைப்படத்தைப்பற்றிப் பேசுகிற முதல் கூட்டம் இது.அதற்குக் காரணம் நான் திரைப்படம் பார்க்காதது அல்ல. இங்கே வந்திருப்போர் எவரையும்விட நான் அதிக எண்ணிக்கையில் படங்களைப் பார்த்திருக்கிறேன் என உறுதியாக்ச் சொல்ல முடியும்.எனது பள்ளிப் பருவத்திலேயே ஆண்டுக்கு நூறு படங்களுக்குக் குறையாமல் பார்த்திருக்கிறேன்.காலை 10 மணி காட்சியில் ஆரம்பித்து இரவு 10 மணி காட்சி வரை ஒரே நாளில் ஐந்து படங்கள் பார்த்திருக்கிறேன். 

 

நான் சிதம்பரத்தில்தான் படித்தேன்.அங்கே பேருந்து  நிலையத்துக்கு அருகில் இருந்த நடராஜா தியேட்டரில் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு காலைக்காட்சியில் ஆங்கிலப் படம் போடுவார்கள்.அவற்றை ஒரு வாரம்கூட விடாமல் பார்த்திருக்கிறேன்.அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஓவியக் கல்லூரி இருந்தது.அங்கு என் உறவினர் ஒருவர் படித்துக்கொண்டிருந்தார்.அவரோடும் அவரது நண்பர்களோடும்தான் ஆங்கிலப் படங்களுக்குப் போவேன்.அவர்கள் சினிமாவைப் பார்த்த விதமே வேறு.படத்தின் ஒளி அமைப்பு, காட்சியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் காஸ்ட்யூம், ப்ராப்பர்டீஸ் உட்பட ஃப்ரேம் ஃப்ரேமாக அலசுவார்கள்.கொஞ்ச நாட்களிலேயே எனக்கும் அந்த அணுகுமுறை பழகிவிட்டது.அவர்கள்தான் எனக்கு மைக்கேல் ஆஞ்சலோ, டாவின்ஸி முதல் பிக்காஸோ வரை நவீன ஓவியங்களை அறிமுகப்படுத்தினார்கள்.பாண்டிச்சேரி ரத்னா தியேட்டரில் நல்ல படம் போட்டால் நடராஜா தியேட்டரில் தகவல் சொல்வார்கள்.என்னுடைய பள்ளி நாட்களில் சிதம்பரத்திலிருந்து இங்கே வந்து படம் பார்த்துவிட்டுப் போயிருக்கிறேன்.ஹிட்ச்காக்கின் North by North west என்ற படத்தை இங்கு வந்துதான் பார்த்தேன்.அப்படி சினிமா பார்த்துக்கொண்டிருந்ததால் என் அப்பா ஒருநாள் என்னை வீட்டைவிட்டு போ என்று சொல்லிவிட்டார்.அம்மாதான் சமாதானப்படுத்தினார்கள்.அன்று நான் பார்த்தது ஒன்றும் பெரிய புரட்சிப் படமல்ல- அகத்தியர்.அப்படி படங்களைப் பார்த்தாலும் சில படங்களைப் பற்றி கட்டுரைகளை எழுதியிருந்தாலும் ஒரு சினிமாவைப்பற்றி பேசுகிற கூட்டம் இதுதான்.  

 

பரியேறும் பெருமாளைப் பார்க்கவைத்து இங்கே பேசவும் வைத்திருக்கிற தோழர் எஸ்.ஆருக்கு நன்றி.முதலில் இந்தப் படத்தோடு சம்பந்தப்பட்ட சிலரைப் பாராட்டவேண்டும்.‘ரயில் விடப் போலாமா’ பாடலைப் பாடியிருக்கிற ப்ரித்திகா, தமிழ் சினிமா இசை உலகுக்குக் கிடைத்திருக்கிற அபூர்வமான குரல்.அந்தப் பாடலை எழுதியிருக்கிற விவேக்கையும் பாராட்டவேண்டும்.இந்தப் படத்தில் சிறு சிறு பாத்திரங்களில் வருகிறவர்களிடத்திலும் டைரக்டர் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார்.லா காலேஜ் ஆசிரியர்கள், பிரின்சிபால், மாணவர்கள்.ஆனந்தியின் அப்பா கேரக்டரில் நடித்திருப்பவர் எல்லோருமே மிகையில்லாமல் பிரமாதமாக செய்திருக்கிறார்கள். 

 

இந்தப் படத்தோடு சந்தோஷ் நாராயணன் அசோசியேட் ஆனதை முக்கியமாகக் கருதுகிறேன்.நான் இளையராஜாவின் ரசிகன்.அவர் இந்தப் படத்தில் ஒர்க் பண்ணியிருந்தால் இந்தக் கதை நிகழும் பூமியை அவருக்கு நெருக்கமாகத் தெரியும் என்பதால் ஆத்மார்த்தமாக செய்திருப்பார். தென் மாவட்டங்களில் நீண்ட காலமாக ஒலித்துக்கொண்டிருக்கும் ‘எங்கும் புகழ் துவங்க’ என்ற பாடலை அவருக்குத் தெரிந்திருக்கும்.அந்தோணி தாசனைக்கூட அவர் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.அவர் நிச்சயம் இந்தக் கதையோடு ஒன்றியிருப்பார். ஆனால் இந்தப் படத்தை விலகி நின்றுப் பார்த்து வேலை செய்பவர், நவீனத்துவ பார்வை உள்ளவர் அத்தகைய ஒரு இசை அமைப்பாளரே தேவை.அந்தத் தேவையை சந்தோஷ் நாராயணன் நிறைவு செய்திருக்கிறார். ‘நான் யார்’  பாடலை அவர் பாடியிருப்பதும் இசை அமைத்திருப்பதும் சிறப்பாக இருக்கிறது.அந்தப் பாடலை மாரி செல்வராஜ்தான் எழுதியிருக்கிறார்.சில டைரக்டர்கள் எல்லா வேலையையும் பார்க்க ஆசைப்படுவார்கள், டி. ராஜேந்தரைப் போல.இயக்குனர் ஷங்கர்கூட பாடல் எழுதியிருக்கிறார்.ஆனால் இந்தப் பாடல் மிக வலிமையான சொற்களைக்கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.பாடலாசிரியர் மாரி செல்வராஜை அதற்காக முதலில் பாராட்டுகிறேன்.நான் யார் என்ற கேள்வி இருத்தலியல் சார்ந்தது.இந்தப் படத்தின் மையச் சரடாக அந்தக் கேள்விதான் இருக்கிறது.அதை அந்தப் பாடல் மிக உக்கிரமாக எடுத்துரைக்கிறது. 

 

படம் ஆரம்பிக்கும்போது வேட்டை நாய்கள் முன்னே முகத்தை நீட்டி அங்கும் இங்கும் தேடும்போதே ஒருவிதமான பதற்றம் பார்வையாளர்களைத் தொற்றிக்கொள்கிறது.அதன் பின் மலையும் மலைசார்ந்த நிலமுமாக விரியும் நிலக்காட்சி ஒரு வித்தியாசமான அனுபவத்துக்கு பார்வையாளனைத் தயார்படுத்துகிறது.அவனுக்குள் அப்போது ஏறும் வெப்பம் படம் முடியும்வரை குறைவதே இல்லை.

 

கதையின் நாயகன் ஆங்கிலம் தெரியாமல் அவமானப்படுகிறான்.தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும் என இப்போதுகூட மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.அதைப்பற்றி ஒரு பதிவை நான் போட்டிருந்தேன். போராடுகிற மாணவர்களின் சிரமத்தை சரியாகப் புரிந்துகொள்ள பரியேறும் பெருமாள் திரைப்படத்தை அந்தத் துணைவேந்தர் பார்க்கவேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தேன்.ஆங்கிலம் காரணமாகவே கல்லூரிப் படிப்பை இடையில் விட்டவர்களை நமக்குத் தெரியும்.இவை எல்லாவற்றையும் தாண்டி ஆங்கிலம் என்பது அவ்வளவு சிரமமானதல்ல என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை.நான் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவன் தான்.பியுசி படிக்கப்போனபோது அங்கே ஆங்கிலத்தில்தான் வகுப்பு எடுத்தார்கள். அறிவியல் பிரிவில் சேர்ந்திருந்த எனக்கு ஓரிரு வாரங்கள் சிரமமாக இருந்தது.அப்புறம் அது புரிய ஆரம்பித்துவிட்டது.பிஏ படிப்பையும் அதன் பின்னர் பிஎல் படிப்பையும் ஆங்கிலவழியில்தான் படித்தேன்.பிஎல் படிக்கும்போது தமிழில் தேர்வு எழுத வாய்ப்பிருந்தது.அரசியலமைப்புச் சட்டம் குறித்த ஒரு பேப்பர் மட்டும் நான் தமிழில் எழுதினேன்.அதில்தான் அதிக மதிப்பெண்ணையும் பெற்றேன்.

 

இந்தப் படத்தைப் பார்த்தபோது எனக்கு ஒரு எண்ணம் வந்தது.ஏன் இதில் கதாநாயகன் ஆங்கிலம் தெரியாதவனாகவும் நாயகி ஆங்கிலம் தெரிந்தவளாகவும் இருக்கவேண்டும்?அவன்ஆங்கிலத்தில் திறமை பெற்றவனாகவும் அவன் நாயகிக்குக் கற்றுத் தருபவனாகவும் அமைத்திருந்தால் அது கதைக்கு எந்த விதத்தில் இடையூறாக இருந்திருக்கும் என்ற கேள்வி எழுந்தது.யதார்த்தத்தில் அப்படி அல்ல என்று இயக்குனர் பதில் சொல்லக்கூடும். சமூகத்தில் இருக்கும் யதார்த்தத்தமும் கலையில் நாம் படைக்கும் யதார்த்தமும் ஒன்று அல்ல. படைப்புக்குள் நாம் உருவாக்கும் யதார்த்தம் என்பது கனவில் நாம் பார்க்கும் யதார்த்தம் போன்றது என லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் மார்க்யெஸ் கூறுவார்.யதார்த்தம் என்றே எடுத்துக்கொண்டால்கூட இப்போது சட்டக் கல்லூரிகளில் அதிகமான கட் ஆஃப் மார்க்குகளைப் பெற்றிருப்பவர்கள் தலித் மாணவர்கள்தான்.ப்ளஸ் டூ படிக்கும்போது அவர்களுக்கு ஏ, பி குரூப்கள் கிடைப்பதில்லை.எனவே ப்ளஸ் டூ முடித்ததும் அவர்களுக்கு இருக்கும் ’ப்ரஃபொஷனல்’ படிப்புக்கான வாய்ப்பு சட்டம் படிப்பது மட்டும்தான்.அதனால்தான் இப்போது சட்டக் கல்லூரிகளில் அதிகமாக தலித் மாணவர்கள் இருக்கின்றனர்.எனவே அவர்களுக்கு ஆங்கிலம் மிகப்பெரிய தடையாக இருக்கிறது என நான் கருதவில்லை.

 

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு எங்கள் தலைவர் திருமாவளவன் என்னோடு பேசினார்.படத்தில் சில காட்சிகள் தன்னை மிகவும் பாதித்துவிட்டதாகச் சொன்னார்.வேட்டைக்குப் போய்த் திரும்பிவந்து ஒரு குளத்தில் பரியனும் மற்றவர்களும் குளிப்பார்கள்.அங்கு வரும் மற்ற சமூகத்தவர்கள் அந்த குளத்தில் சிறுநீர் கழிப்பார்கள்.அதுபோலவே திருமண வீட்டில் அடித்து உதைக்கப்படும் பரியனின் முகத்தில் ஒருவன் சிறுநீர் கழிப்பான்.அந்தக் காட்சியை அவ்வளவுதூரம் காட்டவேண்டுமா?எனத் தனக்குத் தோன்றியதாக அவர் சொன்னார்.அதுபோலவே பரியனின் அப்பாவுடைய வேட்டியை உருவி நிர்வாணப்படுத்தப்பட்டு ஓடவிடப்படும் காட்சியும் தன்னை பாதித்ததாகக் குறிப்பிட்டார்.இந்தக் காட்சிகள் சாதி அபிமானிகள் மனநிறைவு கொள்வதற்காக வைக்கப்பட்டனவா என்ற ஐயம் எழுவதாக அவர் கூறினார்.

 

பரியனின் அப்பாவைப்போன்ற கிராமியக் கலைஞர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன், பழகியிருக்கிறேன்.அவர்கள் மிகவும் விவரம் தெரிந்தவர்களாகவும்,தைரியமானவர்களாகவும் இருப்பார்கள்.பல ஊர்களுக்கும் சென்று தொழில் செய்வதால் வரும் துணிவு அது.ஆனால் அப்படியொரு கிராமியக் கலைஞர் இந்தப் படத்தில் நிர்வாணப்படுத்தப்பட்டு கையெடுத்துக் கும்பிட்டபடியே ஓடுகிறார். கல்லூரியின் உள்ளே இருந்து விரட்டிக்கொண்டே போகிறார்கள், வெளியே சாலைக்கு வந்தும் விடாமல் துரத்துகிறார்கள்.அந்தக் காட்சியைப் பார்த்தபோது அப்படி அவர் இழிவுபடுத்தப்படுவதை விலாவாரியாகக் காடியிருக்கவேண்டாமே என்றுதான் எனக்கும் தோன்றியது.

 

இந்தப் படத்தில் வில்லனாக வரும் தாத்தா கடைசியில் ரயில் பாதையில் சம்மணமிட்டு அமர்ந்து தற்கொலை செய்துகொள்கிறார்.நாயகன் அவரை அடித்துக் கொல்வதாகக்கூட வேண்டாம், அவன் அடிக்கும்போது மயங்கி விழுந்து தண்டவாளத்தில் கிடப்பவர் ரயிலில் அடிபட்டு சாவதுபோலவாவது காட்டியிருக்கலாமே எனத் தோன்றியது.அந்த வில்லனின் கொலைகள் மட்டுமல்ல, தற்கொலையும்கூட தியேட்டருக்கு அப்பால் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டதுபோலத் தோன்றியது.

 

தலித் மக்களின் முன்னேற்றத்தைப்பற்றிப் பேசுகிற எல்லோருமே கல்வியின் அவசியத்தை வலியுறுத்துவார்கள்.ஆனால், படிப்பறிவில்லாத மக்களுக்குக் கல்வியைக் கொடுப்பதைவிட பயந்து கிடக்கும் மக்களுக்கு துணிச்சலைக் கொடுப்பது முக்கியமானது என நான் நம்புகிறேன்.இன்று ஏறக்குறைய மற்ற சமூகத்தினருக்கு இணையாக தலித்துகள் படிப்பறிவு பெற்றுவிட்டனர்.ஆனால் வன்கொடுமைகள் அதனால் குறைந்துவிடவில்லை.‘அடங்க மறு, அத்து மீறு; திமிறி எழு, திருப்பி அடி”என்ற தலைவர் திருமாவளவனின் வார்த்தைகள்தான் இன்று லட்சக் கணக்கான தலித் மக்களைத் தலை நிமிர வைத்திருக்கிறது.அச்சத்திலிருந்து விடுதலை பெறாமல் அவமானத்திலிருந்து தப்பிக்க முடியாது என்பதுதான் தலித்துகள் கற்றிருக்கும் பாடம்.இந்தப் படத்தைப் பார்க்கும் தலித்துகளுக்கு ஏற்படும் உணர்வு வேறு, தலித் அல்லாதவர்களுக்கு ஏற்படும் அனுபவம் வேறு.இந்தப் படம் தலித்துகளை அச்சத்திலிருந்து விடுவிக்கிறதா எனப் பார்க்கவேண்டும்.  

 

பரியனும், அவனது தந்தையும் அவமானப்படுத்தப்படும் காட்சிகள் இயக்குனரின்மீது ஆத்திரத்தை ஏற்படுத்தின.அதுபோன்ற கோபத்தை நான் பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன்.நான் யார் பாடலில் ஒரு வரி வருகிறதே ‘ குடிசைக்குள் கதறி எரிந்தேன் நான் யார்?’ என்று.அப்படி குடிசைகள் எரிக்கப்பட்டபோது அங்கெல்லாம் சென்று பார்த்திருக்கிறேன்.1987 ஆம் ஆண்டு ஆலப்பாக்கம் என்ற கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகள் எரிக்கப்பட்டபோது அந்த நெருப்பு அடங்குவதற்கு முன்பே அங்கு போனேன்.அதன் பிறகு பல ஊர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசைகள் எரிக்கப்பட்டன.அங்கெல்லாம் போய் பார்த்து அந்த மக்களிடம் பேசியிருக்கிறேன்.அப்போது இதே மாதிரி கோபம் வரும். முதலில் அந்த மக்கள்மீது ஆத்திரமாக வரும்.பத்துபேர் சேர்ந்து நின்றிருந்தால் வந்தவர்கள் ஓடியிருப்பார்களே, கும்பலாக வருபவர்களைப் பார்த்ததும் இவர்கள் ஓடுவதால்தானே கொளுத்துகிறார்கள் என்று ஆத்திரம் ஏற்படும்.அது ஆற்றாமையால் வரும் கோபம்.அதன்பிறகு அந்தக் கொடுமையைச் செய்தவர்களுக்குத் தண்டனை வாங்கித் தரவேண்டும் என்ற உறுதி ஏற்படும்.அப்படியான கோபம்தான் இப்போதும் வந்தது.ஆனால் நிதானமாக யோசிக்கும்போது அந்த ஆத்திரத்தை நமக்குள் ஏற்படுத்துவதற்காகத்தான் இப்படி அந்தக் காட்சிகளை இயக்குனர் வைத்திருக்கிறாரோ என்ற எண்ணம் எழுந்தது.கமர்ஷியல் படங்களில் பார்ப்போம், கதாநாயகனே எல்லோரையும் அடித்து வீழ்த்திவிடுவான்.நமக்கு எந்த வேலையும் மிச்சம் இருக்காது.ரஜினி படங்களில் அப்படித்தான் நடக்கும்.அவரே எல்லோரையும் சுட்டுத் தள்ளி மக்களையெல்லாம் காப்பாற்றிவிடுவார்.அடடா இவரே நமது முதலமைச்சராக வந்தால் நம்மையெல்லாம் காப்பாற்றிவிடுவாரே என்ற எண்ணம் பார்வையாளர்களுக்கு ஏற்படுவது அதனால்தான்.அங்கே பார்வையாளன் செயலற்றவனாக்கப்படுகிறான்.இங்கே அப்படி அல்ல. ஆத்திரமடைய வைப்பதன்மூலம் பார்வையாளனை அச்சத்திலிருந்து விடுவிக்கிறது, செயலுக்கு உந்துகிறது இந்தப் படம்.

 

அமெரிக்காவில் இருக்கும் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் நிறவெறிக்கு எதிராக சினிமாவை காத்திரமான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள்.ஆரம்ப காலத்தில் அவர்களைப் பற்றி வெளியான சினிமாக்களில் கறுப்பின மக்கள் கதாபாத்திரங்களாக இருப்பார்கள், அவர்களது வாழிடம் காட்டப்படும்.அவர்கள் போதை மருந்து கடத்துவதைப்பற்றியும், அவர்களுக்குள் நடக்கும் ‘கேங் வார்’களைப் பற்றியும் அந்த சினிமாக்கள் பேசும். பொருளாதார ரீதியாக முன்னேறிவிட்டால் நிறரீதியான பாகுபாட்டிலிருந்து விடுபட்டுவிடலாம் என்ற எண்ணத்தை அவை ஏற்படுத்தின.ஆனால் அதன் பிறகு வந்த படங்கள் நிறத்தின் அடிப்படையிலான பாகுபாட்டை நுட்பமாகப் பேசின. அந்த மாற்றங்களின் பின்னணியில் மால்கம் எக்ஸ் நடத்திய போராட்டங்களைப் பார்க்கவேண்டும். இலக்கியத்தில் குறிப்பாகக் கவிதையில் அந்த மாற்றம் முன்பே நடந்துவிட்டது.கறுப்பின மக்களின் பிரச்சனைகளைப் பேசியதில் மற்ற எந்த இலக்கிய வடிவத்தைக் காட்டிலும் கவிதைக்கே மிக முக்கியமான பங்கு உண்டு.லாங்ஸ்டன் ஹியூஸ் போன்றவர்கள் மகத்தான சாதனைகளைச் செய்திருக்கிறார்கள்.ஆனால் சினிமாவில் அது சற்று தாமதமாகவே நிகழ்ந்தது. கறுப்பின மக்களின் பிரச்சனையைப் பேசும் படங்களை ‘ கெட்டோ சென்ட்ரிக் ‘(Ghetto Centric ) படங்கள் என அழைக்கிறார்கள்.கெட்டோ என்பது கறுப்பின மக்கள் வாழும் பகுதி.அதை நமது சூழலில் சேரி மையத் திரைப்படம் என மொழிபெயர்க்கலாம்.தமிழில் சேரி மக்களைப் பல சினிமாக்கள் காட்டியிருக்கின்றன. ஆனால் அவர்களுடைய நோக்கிலிருந்து அந்த மக்களின் வாழ்க்கையைப் பேசுகிற முதல் ‘ சேரி மைய சினிமா’ எனப்  பரியேறும் பெருமாளை நாம் கூறலாம்.

 

’பாண்டிய ராஜாக்கள்’ என்ற ஸ்க்ரிப்டைத்தான் முதலில் எழுதியதாகவும் அது மிகவும் சீரியஸான ஒன்றாக வந்ததால், முதல் படத்தில் அப்படி ரிஸ்க் எடுக்கவேண்டாம் ஜாலியான ஸ்க்ரிப்டாக ஒன்றை எழுது என இவரது நண்பர்கள் சொன்னதால் அதற்கேற்பவே இந்த ஸ்க்ரிப்டை எழுதியதாகவும் மாரி செல்வராஜ் கூறியிருந்தார்.அப்படி ஜாலியாக நினைத்து எழுதப்பட்ட ஸ்க்ரிப்ட்தான் இப்போது ஒரு தீவிரமான சினிமாவாக நமக்கு முன்னால் வந்திருக்கிறது.எந்தவொரு நல்ல படைப்பும் அப்படித்தான், படைப்பாளி திட்டமிடுவதைப்போல அது வெளிப்படாது.சரியாகச் சொன்னால் நல்ல படைப்பை ஒரு படைப்பாளி உருவாக்குவதில்லை,அந்தப் படைப்புதான் படைப்பாளியை ஊடகமாக வைத்துத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.ஒரு கவிஞராகவும் இருக்கிற மாரி செல்வராஜ் அதை உணர்ந்திருப்பார்.இந்தப் படமும் அப்படித்தான் வெளிப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.இந்தப் படத்தின் ஸ்க்ரிப்டோடு புளியங்குளம் போனதும் அந்த ஊரில், அந்த மக்களிடையே அந்த ஸ்க்ரிப்ட் வேறொரு அவதாரம் எடுத்திருக்கிறது.

 

இந்தப் படத்தின் நாயகன் இருவேறு மனநிலை கொண்டவனாக இருக்கிறான்.தனது மக்களோடு அவன் இணைந்தும் விலகியும் வாழ்கிறான்.பிஎல் படிக்கவேண்டும் என்பது அவனது விருப்பம் அல்ல, அவன் ஊரைச் சேர்ந்த அண்ணன் ஒருவர் போலிஸ் ஸ்டேஷனில் அவமானப்படுத்தப்பட்டு அடிக்கப்படும்போது அவரது விருப்பத்துக்காக பிஎல் படிக்க ஒப்புக்கொள்கிறான்.கல்லூரியில் அவனது சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் ஒரு குழுவாக இருக்கிறார்கள் அதற்கு ஒரு தலைவர் இருக்கிறார்.ஆனால் பரியேறும் பெருமாள் அவர்களோடு சேர்வதில்லை.அவர்களே கூப்பிட்டுக் கேட்கும்போதுகூட அவர்களிடம் தனக்கு நேரும் அவமானங்களைப் பகிர்ந்துகொள்வதில்லை.ஒருமுறை பேருந்திலிருந்து இறக்கி தூக்கிச் சென்று அடிக்கிறார்கள். பரியேறும் பெருமாள் தப்பி ஓடி அவனது ஊர் எல்லைக்குள் நிற்கிறான், கூப்பிடு தூரத்தில் அவன் ஊர் ஆட்கள் இருக்கிறார்கள் அவனைத் துரத்தி வருபவர்கள் மூன்று பேர்தான், தனது ஊர் ஆட்களைக் கூப்பிட்டு அவர்களை அடித்து விரட்டியிருக்கலாம்.அதை அவன் செய்யவில்லை.கல்லூரியில் நடக்கும் பிரச்சனையைப்பற்றி அவன் ஊர் ஆட்கள் விசாரிக்கிறார்கள், நாங்கள் வேண்டுமானால் வருகிறோம் எனச் சொல்கிறார்கள், அதற்கும் அவன் உடன்படுவதில்லை. மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள், மாணவர்கள் அடித்துக்கொள்கிறார்கள், மாணவர்கள் தாமிரபரணி படுகொலையை நினைவுகூர்ந்து சுவரொட்டிகளை ஒட்டுகிறார்கள், ஆனால் எதிலும் பரியன் பங்கேற்பதில்லை.கல்லூரியிலும் சரி ஊரிலும் சரி தான் சார்ந்த சமூகத்திலிருந்து பெரும்பாலும் அவன் விலகியே நிற்கிறான், சில நேரங்களில் அவர்களோடு ஐக்கியமும் ஆகிறான்.ஆடும்போதும், பாடும்போதும், வேட்டைக்குப் போகும்போதும் அவர்களில் ஒருவனாக இருக்கிறான்.வகுப்பறையில் முன் பெஞ்சில் உட்காரும்போது, ‘நாங்க வரக்கூடாதா’ எனக் கத்தும்போது அவனுக்குள் அந்த அடையாளத்தின் நினைவு தீவிரமாகிறது.தனது சமூகத்தோடு ஐக்கியப்பட்டு நிற்காததால்தான் அவன் எல்லா அவமானங்களையும் சகித்துக்கொள்ளக்கூடியவனாக இருக்கிறானா என்ற ஐயம் நமக்கு ஏற்படுகிறது.பிளவுண்ட மனநிலையோடு அவன் சித்திரிக்கப்பட்டிருக்கிறான்.அதனால்தான் ‘நான் யார்?’ என்ற இருத்தலியல் சார்ந்த கேள்வி அவனுக்குள் எழுகிறது.

 

படத்தின் இறுதியில் நாயகியின் தந்தையோடு அவன் பேசும் வசனங்கள் ஆழமான புரிதலை வெளிப்படுத்துகின்றன.படத்தின் துவக்கத்தில் நாயைக் கொஞ்சுகிற இளைஞன், கல்லூரிக்கு வந்த முதல் நாளில் ஆங்கிலம் தெரியாமல் திணறுகிற இளைஞன், தனது நண்பனோடு காமெடியனைப்போல உலா வரும் இளைஞன் படத்தின் இறுதியில் மிகுந்த முதிர்ச்சியோடு பேசுகிறான்.அவன் பட்ட அவமானங்களும், அடி உதைகளும் அவனை வெறுப்பு கொண்டவனாக, மிருகமாக மாற்றவில்லை.அதற்கு மாறாக ஒரு லட்சியத்தை நோக்கி அவனை செலுத்தியுள்ளதைப் பார்க்கிறோம்.’ இந்த சமூகத்தின்மீது கோபப்படவும், இதை வெறுக்கவும் எனக்கு எல்லா நியாயங்களும் இருக்கின்றன.ஆனால், நான் எனது வெறுப்பையெல்லாம் ஆற்றலாக மாற்றுகிறேன்’ எனப் புரட்சியாளர் அம்பேத்கர் ஒருமுறை எழுதியிருப்பார்.அப்படி மாற்றப்பட்ட ஆற்றல்தான் எண்ணற்ற நூல்களை நமக்குத் தந்தது.இந்த நாட்டுக்கு அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றித்தரக் காரணமாகியது. சட்டக் கல்லூரியில் சேரும்போது ‘நான் டாக்டர் அம்பேத்கர் ஆகவேண்டும்’ எனக் கூறும் பரியேறும் பெருமாள் படத்தின் இறுதியில் பேசும் வசனங்கள் அவன் விரும்பியபடியே அவன் அம்பேத்கரை நெருங்கியிருப்பதைக் காட்டுகின்றன.

 

இந்தப் படம் ஆங்கிலம் கற்பதில் உள்ள இடர்பாடுகளை ’ஜாலி’யாகப் பேசுகிறது; ஒரு பெண்ணின் நாகரிகமான காதலைப் பேசுகிறது; கறுப்பி என்ற வேட்டை நாய்க்கும் அதை வளர்த்த நாயகனுக்குமான உறவைப் பேசுகிறது – எதைப் பேசினாலும் அங்கெல்லாம் மிகவும் நுட்பமாக அரசியலைப் பேசுகிறது.இது முழுக்க முழுக்க ஒரு அரசியல் படம். அதே நேரத்தில் அற்புதமான கலைப்படைப்பு.இதைத் தந்திருக்கும் மாரி செல்வராஜ் என்ற கலைஞனை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.முதல் படத்தையல்ல, முதிர்ச்சியான படத்தை நீங்கள் தந்திருக்கிறீர்கள்.

 

இந்த உலகத்தைக் கலையால், இலக்கியத்தால்தான் காப்பாற்ற முடியும் என நம்புபவன் நான்.மனிதர்களை மனிதர்களாக வைத்திருக்கும் ஆற்றல் கலை இலக்கியத்துக்கு மட்டும்தான் இருக்கிறது.அத்தகைய ஆற்றல் வாய்ந்த கலைப் படைப்புகளைத் தரும் படைப்பாளியை நாம் கடவுள் என அழைப்பதில் தவறில்லை.அப்படி ஒரு கலைஞனாக, கடவுளாக இன்று நம்மிடையே அமர்ந்திருக்கிறார் மாரி செல்வராஜ்.அவருக்கு என் வாழ்த்துகள். 

 

நன்றி, வணக்கம்!  

 

(17.10.2018அன்று மாலை பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்து புதுச்சேரியில் தமுஎகச ஒருங்கிணைத்த கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்