வெண்மணி

Views : 89

பதிவு செய்த நாள் 08-Jan-2020

வெண்மணியைப் பற்றி ஒரு கவிதை  எழுத வேண்டுமென்றால் 

அதை காகிதத்தில் எழுத முடியாது 

வெண்மணியைப் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டுமென்றால் 

அதை பேனாவால் எழுத முடியாது 

வெண்மணியைப் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டுமென்றால் 

அதை மையால் எழுத முடியாது 

 

வெண்மணியைப் பற்றி ஒரு கவிதை  எழுத வேண்டுமென்றால் 

குழந்தைகளின் அலறலைக்  கேட்கக்கூடிய செவிகள் நமக்கிருக்கவேண்டும் 

குழந்தைகள் கருகுவதை உணரக்கூடிய  நாசி நமக்கிருக்கவேண்டும் 

குழந்தைகள் எரிந்த சாம்பலின் சூட்டை

உணரக்கூடிய இதயம்

நமக்கிருக்கவேண்டும் 

 

எழுதினான் நாடோடிக் கவியொருவன் 

வியர்வை பாய்ச்சப்பட்ட வயலில்

குருதியால் ஒரு கவிதையை  

 

இருக்கின்றன 

எழுதப்படாமல்  இன்னும்

எத்தனையோ பக்கங்கள்