ஒன்பதாம் கவிதை

Views : 185

பதிவு செய்த நாள் 24-Jan-2020

சொல்லுக்கு மௌனம் பதிலியாகிவிடும்போது

வேட்கையின் தணலுக்கு

அவநம்பிக்கையின் சில்லிப்பு மாற்றாகிவிடும்போது

கவிதை எழுத யார் இருக்கப்போகிறார்கள்?

அழுது நா வறண்டுபோன குழந்தைக்கு

யார் ஒரு வாய் தண்ணீர் தரப்போகிறார்கள்?

அலறி ஓலமிடும் மூதாட்டிக்கு

யார் ஆறுதல் சொல்லப்போகிறார்கள்?

கழுவேற்றப்பட்ட கனவை

கொத்திப் புசிக்கும் காக்கைகளை,

யார் விரட்டப்போகிறார்கள்?

பசுக்கள் மாமிசப் பட்சணிகளாகிவிட்ட காலத்தில்

வண்ணத்துப்பூச்சிகளின் நிறம் உதிர்வதைப் பற்றியும்

மேகங்கள் வெளுத்துக் கலைவதைப்பற்றியும்

யார்

கவலை கொள்ளப்போகிறார்கள் ?