மேலவளவு

Views : 118

பதிவு செய்த நாள் 08-Jan-2020

1. மண் சுவற்றில் பொறித்து வைத்தால்

மழைக்குமேல் தாங்காது

2. அவன் டீ குடிக்க

இரண்டு ரூபாயையும்

தன்மானத்தையும் கொடுக்கவேண்டும்

3. தமிழ் இணைக்கிறது

டம்ளர் பிரிக்கிறது

4. இங்கே முண்டம் கிடந்தது

அந்த கிணற்றில்தான்

தலைகிடந்தது

அங்கே பஸ் நின்றது

அதோ அங்கிருந்துதான் ஆள்வந்தது

 

நீதிபதியாய்  நிற்கிறது ஆலமரம்

வானத்தில் தடயங்களைத்  துழாவியபடி

 

5. வில்வித்தை கற்கலாம்

விரலைக்  கொடுத்துவிடு

தலைவர் பதவி ஏற்கலாம்

தலையைக்  கொடுத்துவிடு

6. வாழ்வு என்பது

அவனது அரிவாளுக்கும்

இவனது கழுத்துக்கும்

இடையில் இருக்கிறது

7. ஓடுவதை நிறுத்தும்வரை

பாதை வளர்ந்து கொண்டுதானிருக்கும்

8. நந்தனைப்பற்றி ஐந்து கதைகள் உண்டு

அக்கினியில் தள்ளத் தள்ள

எழுந்து எழுந்து வந்தது  ஒன்று

புலை நாற்றம்  போக்க

நீர் உதவாமல்  நெருப்பில் குளித்ததாய் ஒன்று

நந்தி விரட்டிச்  செல்ல

ஆடியபாதங்களின் கீழ் அழுந்திப் புதைந்ததாய் ஒன்று

அயல்மொழியின் அனலடிக்க

நிழலுக்கு ஒதுங்கியதாய் ஒன்று

ஆண்டையே அடித்துகொன்று

அந்தணர்மேல் சாட்டியதாய்  இன்னொன்று

நடந்தகதை என்னவென்று

நந்தி சொல்லுமா நடராசன்தான் சொல்வானா?

9. பார்த்துக்கொண்டிருந்தால்

சாட்சிதான்  சொல்லமுடியும்