முள்ளிவாய்க்கால்

Views : 117

பதிவு செய்த நாள் 08-Jan-2020

1.ஒரு நாளை நினைவுகூரும்போது

அந்த நாளின் எல்லா நிமிடங்களையும் நாம்

கற்பனைசெய்து பார்ப்பதில்லை

 

இப்போது

அந்த நாளை நினவுகூரும்

இந்த கணத்தில்

நாம் எண்ணிப்பார்ப்பது எதை?

அந்த நாளின் பகலையா?

இரவையா?

 

 

நள்ளிரவு கடந்து அந்த நாள் உயிர்பெற்ற

ஆரம்ப கணங்களில்

எப்படி இருந்திருப்பார்கள்?

சில்லிட்டுப்போன காற்றில்

நடுங்கும் உடல்களைக் கைகளால்

போர்த்தியிருந்திருப்பார்களா?

அழும் குழந்தையின் சப்தம்

கவனத்தை ஈர்த்துவிடுமென்று பயந்து

அதன் குரல்வளையை நெரித்திருப்பார்களா?

பகலைநோக்கி ஊர்ந்துகொண்டிருக்கும்

இரவைத்

தடுத்து நிறுத்துவது எப்படி என யோசித்திருப்பார்களா?

அந்த இரவு

குண்டுகளின் சப்தங்களால்

சீரழிக்கப்படாத இரவாக இருந்திருக்குமா?

 

 

அவர்களின் நாளை

எப்படி நாம் நினைவுகூரமுடியும்?

நமக்குத் தெரியாது

எறிகணையொன்று விழுவதற்குமுன் கேட்கும் சப்தம்

அது வெடித்துச் சிதறும்போது

விலகிக் கூடும் இருளின் சிறிய இடைவெளியில்

புலப்படும் முகங்கள்

அவற்றில் அப்பியிருக்கும் பயம்

 

 

நமது நாசிகளுக்குத் தெரியாது

கந்தக மணத்தோடு கலந்திருக்கும்

கருகிய உடல்களின் வாசனை

நம் செவிகள் அறியாது

சிதறிய உடல்களின்மீது

தவழும் குழந்தை ஒன்றின் அழுகுரல்

 

அந்த நாளை

நாம் எப்படி நினைவுகூரமுடியும்?

 

நமக்குத் தெரியாது

போர் நடக்கும் இடம்

எப்படி இருக்குமென்பது

 

அங்கு

இரவுகளில் மனிதர்கள் தூங்கியிருப்பார்களா?

அதிகாலையின் மெல்லிய வெளிச்சத்தில்

மரித்துக்கிடக்கும் தம் உறவுகளைப் பார்த்து

அழுவதற்கும் அவர்களுக்கு நேரம் இருந்திருக்குமா?

எதுவுமே நமக்குத் தெரியாது

பதுங்கு குழிகளில் வாழ்வது

அல்லது சாவது

நமக்குத் தெரியவே தெரியாது

 

அப்படியிருக்கும்போது

அவர்களின் நாளை

எப்படி நாம் நினைவுகூரமுடியும்?

 

நமக்குத் தெரிந்தது

நம்முடைய நாள்தான்

 

அவர்கள் ஒட்டுமொத்தமாகப்

புதைக்கப்பட்ட

அந்த நாளில் நாம்

என்ன செய்துகொண்டிருந்தோம்?

திரையரங்குகளில் இருந்தோம்

உணவகங்களில் விருந்துண்டோம்

தொலைக்காட்சிகளில் புதைந்துகிடந்தோம்

பயணித்தோம்

புகைத்தோம்

குடித்தோம்

பாதுகாப்பான நம் வீடுகளில்

புணரவும் செய்தோம்

 

நம்முடைய நாளைத்தான் நமக்குத் தெரியும்

அதைத்தான் நம்மால் நினைவுகூரமுடியும்

 

அப்புறம் ஏன்

அறியாத ஒரு நாளைப்பற்றிப் பேசுகிறோம்?

நாம் பார்க்காத உடல்களைப்பற்றி

புதைகுழிகளைப்பற்றி

தொட்டுணராத குருதியைப்பற்றி

வீரத்தைப்பற்றி

தியாகத்தைப்பற்றி

துயரத்தைப்பற்றி

ஏன் பேசுகிறோம்?

 

 

நாம் பேசவேண்டும் நமது சுயநலத்தை

நாம் பேசவேண்டும் நமது கையாலாகாத்தனத்தை

நாம் பேசவேண்டும் நமது துரோகத்தை

நாம் பேசவேண்டும் நாம் மனிதர்களே இல்லை

என்ற உணமையை

 

 

2.முன்பொரு காலமிருந்தது

ஈழத்தில் அழுத கண்ணீர்

இங்கே பெருக்கெடுத்து

தெருவெல்லாம் ஓடி

தீயை உசுப்பிவிட்ட காலம்

 

முன்பொரு காலமிருந்தது

 

துவக்கு, லோறி, சப்பாத்து, சாரம் என

நாமும் கதைத்து

நண்பர்களைப் பார்த்து

விசரோ? எனக்கேட்டு வேடிக்கை செய்த காலம்

 

முன்பொரு காலமிருந்தது

 

குப்பியணிந்த சிறுவர்கள்

ஒருகையில் துவக்கும்

மறுகையில் புல்லாங்குழலுமாய்

புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட காலம்

 

முன்பொரு காலமிருந்தது

 

‘தமிழன் இல்லாத நாடில்லை

தமிழனுக்கென்று ஒரு நாடில்லை‘

முழக்கங்களின் கவர்ச்சியில்

மூழ்கிக் கிடந்த காலம்

 

முன்பொரு காலமிருந்தது

 

கேப்றன், கேணல்

தேசியத் தலைவர் மாவீரர்

பட்டங்களே அடையாளங்களாய்

மாறிவிட்டிருந்த காலம்

 

முன்பொரு காலமிருந்தது

 

 

செய்தியாளர் சந்திப்புக்கு

உலகமே திரண்டுவந்து

முண்டியடித்து நின்ற காலம்

 

அப்படியொரு காலமிருந்தது.......

 

 

3.கைகளுக்குப் பதிலாக

கட்டுகளோடிருக்கும் குழந்தை

புன்னகைக்கும் விழிகளால்

நம்மைப் பார்க்கும்போது

நாம் ஏன் முகத்தைத் திருப்பிக்கொள்கிறோம்?

 

4.கைகளைக் கோர்த்துக்கொண்டு

சுவர்போல நின்றோம்.

சாலையில் விரைந்தவர்களை

எதிரிகளாய் எண்ணிச் சபித்தோம்.

நீர்சவுக்காய் விளாசிய

மழையையும்மீறி முழக்கமிட்டோம்.

முகத்தில் வழிந்த தண்ணீர்பட்டு

நனைந்திருந்தது குரல்

எனினும் ஆக்ரோஷம் குறையவில்லை.

தொலைக்காட்சிக் காமிராக்கள்

படம்பிடித்துச் செல்லும்வரை

கட்டுப்பாடு காத்தோம்

அதன்பிறகு

வீடுகளுக்கு விரைந்தோம்

செய்தியில் வரப்போகும்

முகங்களைப் பார்ப்பதற்கு

 

5.கால்களின்றிப் படுத்திருந்தவனிடம் கேட்டேன்

பதில்சொல்லவில்லை

விழிகள் இருந்த இடத்தில்

பஞ்சு உருண்டைகளோடிருந்த

பெண்ணிடமும் கேட்டேன்

பதில் சொல்லவில்லை

கன்னத்துச் சதை பிய்ந்து

கடைவாய்ப் பற்கள் தெரியக் கிடந்த முதியவனும்

மௌனமாகவே இருந்தான்

 

உங்களில் எவருக்கும்

நாட்குறிப்பு எழுதும் பழக்கமில்லையா?

உங்களில் எவரிடமும்

புகைப்படக் கருவி இல்லையா?

உங்களில் எவரும் கவிஞர்களில்லையா?

ஓவியம் தீட்டத் தெரிந்தவர்கள்

ஒருத்தருமே இல்லையா?

இறுதிநாளில் என்னதான் நடந்தது?

 

கேள்விகளுக்கு எவரும் பதில்சொல்லவில்லை

செத்தவர்களில் யாரிடமேனும் கேட்கலாமெனப்

பிணவறைக்குப் போனேன்

அங்கு கிடத்தப்பட்டிருந்தது எனதுடல்

மார்புக்கூடு பிரிக்கப்பட்டிருந்தது

இதயம் இருந்த இடத்தில்

கிடந்ததொரு குழவிக்கல்