அழியட்டும் ஆணவக் குற்றங்கள் - ரவிக்குமார்

Views : 734

பதிவு செய்த நாள் 15-Mar-2020

அழியட்டும் ஆணவக் குற்றங்கள்

ரவிக்குமார்

ஆணவக் கொலைகளைத் தடுப்பது தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் 27.03.2018 வழங்கியது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம்.கன்வில்கர், நீதிபதி டி.ஒய்.சந்த்ரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியுள்ள 54 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு மத்திய அரசு சிறப்பு சட்டம் ஒன்ற இயற்றவேண்டும் என உத்தரவிட்டிருப்பதோடு அப்படி சட்டம் இயற்றும்வரை மத்திய மாநில அரசுகள் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கியிருக்கிறது.

” சுதந்திரம் என்ற சொல்லின் உறுதியான பொருள் தேர்வுசெய்யும் ஆற்றல் என்பதில் அடங்கியுள்ளது” என ஃப்ரெஞ்ச் தத்துவ அறிஞர் சிமோன் வெய்ல் (Simon Weil ) கூறியுள்ளதை மேற்கோள் காட்டி அந்தத் தீர்ப்பைத் துவக்கியுள்ள தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா “ வர்க்க கௌரவத்தின் பெயரால், தேர்வு செய்யும் ஆற்றல் நசுக்கப்படும்போது சமூகத்தின் எலும்புகளிலும், மூளைகளிலும் அச்சம் மேலோங்குகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சக்தி வாஹினி என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கில்தான் இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பு ஹரியானாவிலும் மேற்கு உத்தரப்பிரதேசத்திலும் ஆணவக் கொலைகள் தொடர்பாக ஆய்வு செய்யுமாறு தேசிய மகளிர் ஆணையம் 22.12.2009 ல் உத்தரவிட்டிருந்தது. அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டது. ஆணவக் கொலைகள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி மணம் செய்யாமல் குழந்தை பெறுதல்; சமூகப் பதற்றம்; குடும்பத்தைத் துறத்தல் உள்ளிட்ட பல்வேறு துயரச் சம்பவங்களும் அத்துடன் இணைந்திருப்பது கண்டறியப்பட்டது.

2016 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 71 ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண மையம் (என்சிஆர்பி) வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. உத்தரப் பிரதேசத்தில் 16; மத்தியப் பிரதேசத்தில் 18; குஜராத்தில் 10; மகராஷ்டிராவில் 8; பஞ்சாப்பில் 8 தமிழ்நாட்டில் 1 என மாநிலவாரியாக நடந்த ஆணவக் கொலைகளின் பட்டியலையும் அது தந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 192 ஆணவக் கொலைகள் நடந்ததாகவும் அதில் 21 கொலைகள் குஜராத்திலும் 14 கொலைகள் மத்தியப் பிரதேசத்திலும் 131 கொலைகள் உத்தரப்பிரதேசத்திலும் நடந்திருப்பதாகவும் என்சிஆர்பி யின் 2015 ஆம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவித்திருந்தது. இந்தப் புள்ளி விவரங்களில் சொல்லப்பட்டிருக்கும் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதை பத்திரிகைகளில் வெளியான ஆணவக் கொலைகள் தொடர்பான சம்பவங்கள் குறித்த செய்திகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் தெரிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு ஆண்டும் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்தான் அதைத் தடுப்பதற்கு தனியே சட்டம் இயற்றவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஆனால் மத்திய அரசோ அதைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் “ சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விஷயம், ஆணவக் கொலையையும் கொலையாகவே எண்ணி ஐபிசி பிரிவுகள் 300, 302 ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆணவக் கொலைக்கென தனி சட்டம் இயற்றுவது தொடர்பாக மாநில அரசுகளோடு கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது” எனக் கூறப்பட்டிருந்தது.

’காப் பஞ்சாயத்து’ என வட இந்தியாவிலும் ‘சாதி பஞ்சாயத்து ‘ என தமிழ்நாட்டிலும் அழைக்கப்படுகிற சட்டவிரோத கூட்டங்களைத் தடை செய்வதற்கும், ஆணவக் கொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் வகைசெய்யும் ஆலோசனைகள் அடங்கிய அறிக்கை ஒன்றையும் சட்ட மசோதா ஒன்றையும் 2012 ஆம் ஆண்டே இந்திய சட்ட ஆணையம் மத்திய அரசிடம் வழங்கிவிட்டது.

சட்ட ஆணையத்தால் உருவாக்கப்பட்ட’ சட்டவிரோதக் கூட்டம் ( திருமண சுதந்திரத்தில் தலையிடுதல் ) தடுப்புச் சட்டம் ‘( Prohibition of Unlawful Assembly (Interference with the Freedom of Matrimonial Alliances) Act ) என்ற சட்ட மசோதா ’சட்டபூர்வ வயதை எட்டிய, மனம் ஒத்த இருவர் திருமணம் செய்துகொள்வதைத் தடுப்பதற்காகக் கூட்டப்படும் ‘காப் பஞ்சாயத்து’ உள்ளிட்ட அனைத்துவிதமான கூட்டங்களையும் சட்டவிரோதக் கூட்டங்கள் என அறிவித்துள்ளது. ஆனால் இந்த மசோதாவை சட்டமாக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது.

‘வயதுவந்த இருவர் மனம் ஒப்பித் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தால் அதற்கு குடும்பத்தின் அனுமதியோ, சாதி, சமூகம் ஆகியவற்றின் அனுமதியோ தேவை இல்லை’ எனத் தெளிவாகக் கூறியிருக்கும் உச்சநீதிமன்றம், கௌரவம் என்ற பெயரால் கூட்டப்படும் ஒரு கூட்டத்தை ‘காப் பஞ்சாயத்து’ என அழைப்பதா ’சாதிப் பஞ்சாயத்து’ என அழைப்பதா என்பது பிரச்சனை அல்ல அந்தக் கூட்டம் திருமணம் செய்து கொள்ளும் தமபதியினரையோ அவர்களது பெற்றோரையோ அழைத்து விசாரிக்கிறதா என்பதே கவனிக்கப்படவேண்டியது எனக் கூறியுள்ளது.  

‘சதி’ ‘வரதட்சணை’ ஆகியவற்றை ஒழித்து இயற்றப்பட்ட சட்டங்கள் சமூகத் தீமைகளை ஒழிப்பதற்கு பயன்பட்டன. அதுபோலவே ஆணவக் கொலையைத் தடுப்பதற்காகவும், அதனால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும் , அந்தக் குற்றத்தில் ஈடுபடுகிறவர்களைத் தண்டிப்பதற்காகவும் சிறப்பு சட்டம் ஒன்றைப் பாராளுமன்றம் இயற்றவேண்டும் என உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்திருக்கிறது. அப்படியான சட்டம் இயற்றப்படும் வரை மத்திய மாநில அரசுகள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. தடுப்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள், தண்டிக்கும் நடவடிக்கைகள் என மூன்று தலைப்புகளில் வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் அளித்திருக்கிறது.  

தடுப்பு நடவடிக்கைகள் :  

ஆணவக் குற்றங்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகளை மாநில அரசுகள் உடனடியாகக் கண்டறியவேண்டும்; அந்தப் பகுதிகளின் காவல் அதிகாரிகளுக்கு அதுகுறித்து விழிப்போடு இருக்குமாறு அறிவுறுத்தவேண்டும்; அந்தப் பகுதிகளில் எங்காவது சாதிப் பஞ்சாயத்து / கூட்டம் கூடுவதாக செய்தி கிடைத்தால் அதை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவேண்டும்;செய்தி கிடைத்தது டிஎஸ்பி மட்டத்தில் உள்ள அதிகாரி அந்தப் பகுதிக்குச் சென்று சாதிப் பஞ்சாயத்து / கூட்டம் கூடக்கூடாது என மக்களிடம் எடுத்துரைக்கவேண்டும்;அதையும் மீறி சாதி பஞ்சாயத்து நடந்தால் அங்கேயே டிஎஸ்பி இருக்கவேண்டும்; அந்தப் பஞ்சாயத்தின் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்யவேண்டும்; அந்த கூட்டம் சட்டவிரோதமான முடிவுகளை எடுப்பதற்க்காகத்தான் கூடுகிறது என டிஎஸ்பி சந்தேகித்தால் அதைத் தடுப்பதற்கு சிஆர்பிசி 144 பிரிவின்கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கலாம், பிரிவு 151ன் கீழ் கைதும் செய்யலாம். ஆணவக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளோடு இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.  

நிவாரண நடவடிக்கைகள் : 

தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி சாதி பஞ்சாயத்து / கூட்டம் கூட்டப்பட்டால் ஐபிசி பிரிவுகள் 141,143,503 மற்றும் 506ன் கீழ் வழக்கு பதிவு செய்யவேண்டும்; அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் தம்பதியினரை பதுகாப்பான இடத்துக்கு அழைத்துச்செல்லவேண்டும்; ஓவ்வொரு மாவட்டத்திலும் அத்தகைய தமபதியினர் பாதுகாப்போடு இருப்பதற்கு ஏற்ற பாதுகாப்பு இல்லங்களைத் துவக்குவது குறித்து மாநில அரசுகள் சிந்திக்கவேண்டும்; கலப்பு மணம் செய்துகொள்ள விரும்புவோர் சட்டப்படியான வயதை எட்டியவர்களாக இருந்தால் அந்த திருமனம் நடைபெறுவதற்கான பாதுகாப்பை காவல்துறை தரவேண்டும்; தங்களது திருமணத்தை கௌரவத்தின் பெயரால் சாதியினரோ, குடும்பத்தினரோ, மற்ற எவருமோ எதிர்ப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டால் அதை டிஎஸ்பி விசாரித்து எஸ்பிக்கு அறிக்கை அளிக்கவேண்டும்; அந்த அறிக்கையின் அடிப்படையில் எஸ்பி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ஆணையிடவேண்டும்.  

தண்டனை நடவடிக்கைகள்:    

இந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் காவல்துறையைச் சேர்ந்தவர்களோ மாவட்ட அதிகாரிகளோ பின்பற்றத் தவறினால் அதை வேண்டுமென்றே செய்த தவறாகக் கருதி அவர்கள்மீது உரிய துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் தண்டனை வழங்கப்படவேண்டும்; ஆறுமுகம் சேர்வை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிபடையில் ஆணவக் குற்றங்களைத் தடுக்கத் தவறும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்; கலப்புமணத் தமபதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக வரும் புகார்களைப் பெறவும் விசாரிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்பி, மாவட்ட சமூகநல அதிகாரி, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி ஆகியோர் அடங்கிய சிறப்புப் பிரிவு ஒன்றை மாநில அரசுகள் உருவாக்கவேண்டும்; இந்த சிறப்புப் பிரிவுகளில் 24 மணி நேர ஹெல்ப்லைன் வசதி இருக்கவேண்டும்; ஆணவக் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் அதற்கென உருவாக்கப்படும் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படவேண்டும். 

எனக் கூறியிருக்கும் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவு இனிமேல் பதியப்படும் வழக்குகளுக்கு மட்டுமின்றி ஏற்கனவே கிடப்பில் இருக்கும் வழக்குகளுக்கும் பொருந்தும் எனத் தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு வாரங்களுக்குள் அனைத்து மாநில அரசுகளும் இதை நடைமுறைப் படுத்தவேண்டும் எனவும் கண்டிப்போடு உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.   

உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதுபோல ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு இயற்றுவதும், இதில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் சரிவர நடைமுறைப் படுத்துவதும் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், ஊடகங்கள் தரும் அழுத்தத்தைப் பொருத்தே அமையும்.