“பொதுத்துறை வங்கிகளின் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் உயருமா? "

Views : 75

பதிவு செய்த நாள் 18-Dec-2023

“பொதுத்துறை வங்கிகளின் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் உயருமா? "

“உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் பேசமுடியாது”

ரவிக்குமார் எம்.பி எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் தகவல்.

===

(அ) ​​பொதுத்துறை வங்கிகளில் (PSBs) நவம்பர் 2002 க்கு முந்தைய ஓய்வூதியதாரர்களின் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா? அப்படியானால், அதன் விவரங்களைத் தருக;

(ஆ) PSB களின் ஓய்வூதிய உயர்வு விவகாரத்தில் நிதி அமைச்சகத்தின் தற்போதைய நிலைப்பாடு என்ன? ;

(இ) பொதுத்துறை வங்கிகளின் ஓய்வூதிய உயர்வு விவகாரத்தை ஆராய அமைக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்ததா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?

என்ற வினாக்களை ரவிக்குமார் எம்.பி எழுப்பினார். அவற்றுக்கு நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கரட் பின்வருமாறு பதிலளித்திருக்கிறார்:

(அ) பொதுத்துறை வங்கிகளில் 1.11.2002க்கு முன்பு ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஒரே விதமான அகவிலை நிவாரணத்தை (DR) 01.10.2023 முதல் வழங்குமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தும்படி இந்திய வங்கிகள் சங்கத்துக்கு ( IBA) 05.10.2023 தேதியிட்ட கடிதத்தின் மூலம் அரசு தெரிவித்துவிட்டது.

பொதுத்துறை வங்கிகளில் இருதரப்பு ஒப்பந்தங்களின்மூலம் புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, அந்தந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வாரியங்கள், வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல் மற்றும் இடமாற்றம்) சட்டம், 1970/1980ன் பிரிவு 19ன் கீழ் தங்களின் அதிகாரங்களைப் பயன்படுத்தி ஊழியர்களின் ஓய்வூதியத் திட்ட விதிமுறைகளை உருவாக்கின. இந்த விதிமுறைகளில் ஓய்வூதியத்தைத் திருத்துவதற்கான ஏற்பாடு இல்லை. இருப்பினும், வங்கிகளில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஓய்வூதியத்தில் அகவிலை நிவாரணம் (DR ) வழங்கப்பட்டு வருகிறது, மேலும் அது அரையாண்டுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் உயர்த்தப்படுகிறது.

இந்திய வங்கிகள் சங்க (IBA ) வழிகாட்டுதலின்படி, பொதுத்துறை வங்கிகளின் ஓய்வூதிய உயர்வு விஷயத்தை ஆராய அமைக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. தற்போது இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் இதுகுறித்துப் பேச முடியாது.”

இவ்வாறு அமைச்சர் தன் பதிலில் தெரிவித்துள்ளார்